திங்கள், 18 பிப்ரவரி, 2013

காஷ்மீரின் பாதி விதவைகள் - ஜனவரி 2013

   காஷ்மீரின் பாதி விதவைகள் - ஜனவரி 2013 இதழ்


 பர்வீனா காணமற்போன குழந்தைகளின் பெற்றோர்கள் அமைப்பின் தலைவி. புல்வாமா கிராமத்தவர்களை ஒருவிதமாக சமாளித்து அனுப்பி விட்டோம் என நிம்மதி அடைந்தாள். ஆனாலும் அவளுக்கு நன்றாகத் தெரியும் சமதுல்லாஹ்வும் குலாம் நபி வானியும் கிடைக்கவே மாட்டார்கள் என்பது.
    ஆனால் அந்த கிராமவாசிகளிடம் அதைப்பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டால் அவர்கள் துவண்டு போவார்கள் என்பதை பர்வீனா நன்றாக அறிவாள்.
    அப்படித்துவண்டு போகாமல் அவர்கள் வெகுண்டெழுந்தால் அவர்களைச் சமாளிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும்.
    ஆகவே அனுப்பி விட்டது ஒரு பெரும் செயலாகவே தெரிந்தது பர்வீனாவுக்கு .
    ஆனால் நெஞ்சம் கனத்தது. கண்கள் பனித்தன. அந்த அப்பாவிகளிடம் நீங்கள் தேடும் சமதுல்லாஹ் கனானெய்யும் குலாம் நபிவானியும் கிடைக்கவே மாட்டார்கள். இது என் அனுபவம் என்று சொல்லமுடியவில்லை. அந்த வகையில் அந்தக் கிராமத்தவர்களை நாம் ஏமாற்றி விட்டோம் என்றே மனம் புழுங்கினாள். அதனால் கண்கள் பணித்தன. அவள் மனசாட்சி அவளை துழைத்தெடுத்தது
    பர்வீனாவை பிரிதொரு நினைப்பும் வாட்டியெடுத்தது. அது அவர்கள் காட்டிய அந்த பிணங்கள் யாருடையவை? எந்த குடும்பத்தை சார்ந்தவை? அவர்களை இழந்தவர்கள் யார்? அவர்களின் குடும்பங்கள் எங்கே? இவர்கள் இந்த இராணுவத்தைச் சார்ந்தவர்கள் யாருக்கெல்லாம் இந்த பிணங்களையே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்? ஒரு பக்கம் நெஞ்சம் குமுறியது. இன்னொரு பக்கம் மக்களின் அவலங்கள் குறித்து ஆதங்கம் அனைத்தையும் விஞ்சி வந்தது. இந்த பிணங்களின் சொந்தக்காரர்களின் முகவரிகளைக் கண்டாக வேண்டும் இராணுவத்தின் கொலைபாதங்களை அம்பலப்படுத்தியாக வேண்டும். அதனூடே சமதுல்லாஹ்வையும் குலாம் நபியையும் தேடும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என கங்கணம் கட்டினாள்.
    அடுத்த நாளே காணாமல் போனவர்களின் பெற்றோர் குழுமத்தைக் கூட்டினாள். அவர்களிடம் இராணுவத்தின் பித்தலாட்டங்களை விளக்கிச் சொன்னாள். அனைவரும் வைத்தக்கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
    சோகம் சொட்ட கேட்டவர்களின் கண்களில் கண்ணீர் கொட்ட எடுத்துரைத்தாள் பர்வீனா.
    எல்லோருடைய கண்களும் கலங்கின.
முடிவில் பர்வீனா என்ன செய்யலாம் எனக்கேட்டாள்.
    இந்த கேள்விக்கு மட்டும் யாரும் பதில் சொல்லிடவில்லை. காரணம் அவர்கள் அனைவரும் அறிவார்கள் கஷ்மீரில் இதுபோல் தினம் தினம் நடக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் இல்லை என்பதை.
    அழுவதைத் தவிர அங்கே வேறெதும் செய்திட இயலாது. அதனால் அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்து முடித்து விட்டார்கள். அழுகை. அவ்வளவுதான்
    இராணுவத்தின் கொட்டடியில் இருப்பவர்களை மீட்க ஒரு வழி இருந்திருந்தால் அன்றளவும் அவர்கள் 10,000 சமதுல்லாஹ் களையும் குலாம் நபி வானிகளையும் மீட்டிருப்பார்கள்
    அந்த குடும்பங்களின் வாழ்க்கை அவ்வளவுதான் என்றே எல்லோரும் அமைதி காத்தார்கள்.
    காணாமற் போனவர்களின் பெற்றோர்களின் குழுமத்தைச் சார்ந்த ஒருவர் வழக்கம் போல் முதல் தகவல் அறிக்கை ஒன்றைப்பதிவு செய்து நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்திட வேண்டியது தான் என்றார்.
    இன்னொருவர் ஆயுதம் தாங்கிய படைகளின் சிறப்பு அதிகார சட்டத்தை ரத்துசெய்துவிட்டால் ஏதாவது நடக்கும். அதிலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று எல்லோருடைய விரக்தியையும் ஒட்டு மொத்தமாக வெளிப்படுத்தினார். அத்தோடு கலைந்துவிட்டார்கள். அனைவரின் கண்களும் கண்ணீரால் நிரம்பி நின்றன.
    ஆமாம் அவர்களில் ஒவ்வொருவரும் அதுபோல் பாதிக்கப்பட்டவர்களல்லவா?
    அனைவரையும் போல் பர்வீனாவினால் அத்துணை விரைவாக விடைபெற்றுச் சென்றிட இயலவில்லை. அந்த அப்பாவி கிராமவாசிகள் அவசியம் அடுத்த நாள் வருவார்கள். அவர்கள் இரண்டு குடும்பத்தைச் சார்ந்தவர்களோடு வருவார்கள்.
    என்ன செய்யலாம் எனக்கேட்பார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? ஒரேயடியாக எங்களால் எதுவும் ஆகாது எனச் சொல்லிட இயலாது.
    அப்படிச்சொன்னால் அந்த இருவரின் மனைவியருக்கும் ஏதாவது ஆகிவிடும். அதன் பின் எல்லாம் கெட்டுவிடும். உண்மையைச் சொல்லாமல் இழுத்தடித்தால் அவர்களை ஏமாற்றுவது தான் அது. அதைவிட ஈனச்செயல் எதுவுமிருக்காது. இப்படி அடுக்கடுக்கான எண்ணங்கள் பர்வீனாவை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
    ஆனால் அந்த இருவரின் மனைவியரில் சமதுல்லாஹ்வின் மனைவி ஏற்கனவே மனநிலை பாதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாள் என்பது பர்வீனாவுக்கு அப்போது தெரியாது. அதனால் அவள் அவர்கள் இருவருக்கும் கஷ்மீரின் யதார்த்த நிலையை எப்படிப் படிப்படியாக புரியவைப்பது என யோசித்துக் கொண்டிருந்தாள்.
    மறுநாள் பர்வீனாவைத் தேடி கிராமத்து வாசிகள் வந்தார்கள். ஜெமிலாவும் குலாம் நபி வானியின் மனைவியும் உடன் வந்தாள்.
    கணவன் இறந்துவிட்டான் என எண்ணிய அவள் இத்தா என்ற காத்திருக்கும் காலத்திற்குள் புகுந்தாள். இப்போது கணவன் இறக்கவில்லை என்பதனால் அவனை எப்படியெனும் கண்டுபிடித்துவிட இயலும் என்ற உறுதியில் அந்த கிராமவாசிகளோடு பர்வீனாவைப் பார்க்க வந்தாள்.
    இனி பர்வீனாவோடு இணைந்து சமதுல்லாஹ் கனானெய்யும் தனது கணவன் குலாம் நபிவானியையும் தேடிடுவதே தனது பணி என முடிவு செய்தாள். கிராமவாசிகளின் உதவியோடு இராணுவம் தூக்கிச் சென்றவர்களை மீட்டுவிடலாம் என்றும் நம்பினாள் ஜமீலா.
    பர்வீனாவுக்கு ஜமீலாவை அறிமுகப்படுத்தினார்கள். இவர்தான் இராணுவத்தினர் கடத்தி வந்தவர்களில் குலாம் நபிவானி என்பவரின் மனைவி என அறிமுகப்படுத்தினார்கள்.
    சற்றும் தாமதிக்காமல் பர்வினா சமதுல்லாஹ்வின் மனைவி என்றாள்.
    அவளுக்கு மனநிலையில் பிரச்னை. சிரித்துக்கொண்டே இருக்கின்றாள் என்றார்கள்.
    பர்வீனாவும் அவளுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தாள். ஜெமீலாவிடம் நீ உறுதியாக இரு, நாம் முயற்சி செய்வோம் என்றாள். ஜெமீலாவை உறுதிபடுத்திடத்தான் இந்த வார்த்தைகளைச் சொன்னாளே அல்லாமல் அவளுக்கே அந்த வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை.
    சமதுல்லாஹ் கனானெய் இன் மனைவி வஹிதாவின் நிலை அவளுக்கு வந்துவிடக் கூடாது என்பதனால் தான் பர்வீனா அப்படி பேசினாள்.
    ஜெமீலா பர்வீனாவிடம் நாம் எடுக்கும் முயற்சி இருவருக்காகவும் இருக்கட்டும். ஒரு முறை தன் கணவனை நேரில் பார்த்துவிட்டால் வஹிதா சீராகிவிடுவாள் என்றாள் ஜெமீலா.
    பர்வீனா ஜெமீலா காட்டும் உறுதியால் சற்றுப் பதறியே போய்விட்டாள். ஏனெனில் இனி வரும் நாள்கள் ஜெமீலாவுக்கு ஏக்கம் ஏமாற்றம் இவை நிறைந்ததாகவே இருக்கும் என்பதை அவள் நன்றாக அறிவாள்.
    நாட்கள் நகர்ந்தன. இராணுவத்தினர் நாற்பதாயிரம் ரூபாயை வாங்கியதாகவோ புல்வாமா கிராமத்திலிருந்து இரண்டு பேரை அழைத்து வந்ததாகவோ காட்டிக் கொள்ள வில்லை. அதனால் இராணுவத்தினரின் முழு அக்கிரமத்தையும் கொடுமையையும் அப்படியே விழுங்கிட வேண்டியதாயிற்று. ஜெமீலாவால் அது முடியவில்லை.
    அடுத்து முதல் தகவல் அறிக்கை ரூபாய் ஐந்தாயிரம் செலவில் பதிவு செய்யப்பட்டது.
    வழக்கம்போல் நீதிமன்றத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்றம் பத்தோடு பதினொன்று அத்தோடு இஃதொன்று என வாங்கி வைத்துக்கொண்டது.
    இப்போது நாள்களல்ல, கிழமைகள் நகர்ந்தன. பர்வீனாவால் சாதிக்க முடிந்தது எதுவுமில்லை என்பதை ஜெமீலா இப்போது நன்றாக உணர்ந்தாள்.
    அதனால் தனக்கொரு பாதையை வகுத்துக்கொண்டு தேட தொடங்கினாள்.
    மாதங்களும் வருடங்களும் நகர்ந்தன. ஜெமீலாவுக்கு மூன்று குழந்தைகள், ஒரு மகன், இரண்டு மகள்கள். இவர்களை பள்ளிக்கு அனுப்புவதைப் பற்றியோ அவர்களை ஆளாக்குவதைப் பற்றியோ சிந்திக்க நேரமில்லை. இருந்ததையெல்லாம் விற்று கணவனை தேடிடும் முயற்சியில் செலவு செய்தார்கள்
    கிராமத்தவர்கள் எத்தனைக்காலந்தான் இப்படி அலைவாய். இன்னொரு திருமணத்தை முடித்துக்கொண்டு பிள்ளைகளைக் கவனி என அறிவுரைக் கூறினார்கள்.
    எந்த நிலையிலும் மறுமணம் என்பதில்லை. என் கணவனை உயிருடன் அல்லது பிணமாகப்பார்க்கும் வரை ஓயமாட்டேன் எனச் சொல்லிவிட்டாள் ஒற்றை வரியில் ஜெமீலா.
    இப்போது இருந்ததெல்லாம் முடிந்தது. நாலு வீட்டில் வேலை செய்து வாழ்ந்திட வேண்டும் என்ற நிலை. கிடைத்தக் கூலி காய்ந்திடும் குழந்தைகளை காப்பாற்றிடவே போதுமானதாக இல்லை. கணவனை தேடிட திரும்பும் திசையெல்லாம் பணத்தை அள்ளி இறைத்திட வேண்டியதிருந்தது. அதை அவளால் சமாளித்திட இயலவில்லை.
    தன் வயிற்றை இயன்ற மட்டும் கட்டிப்போட்டு விட்டு குழந்தைகள், கணவன் இவர்களுக்கே கையில் கிடைத்ததையெல்லாம் செலவிட்டாள்.
    இப்போது ஒரு வயிற்றுவலி அவளைத் தொற்றிக்கொண்டது. அதனை அலட்சியம் செய்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.  காரணம் கணவன் கிடைத்துவிட்டால் மொத்தப் பிரச்னையும் தீர்ந்து விடும் என்ற உறுதியில் இருந்தாள் அவள்.
    ஒரு நாள் அவளை வயிற்றுவலி கீழேயே தள்ளிவிட்டது. துடித்துபோனாள் வலியால் .
    அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள்.
    சிறுநீரகம் ஒன்று முற்றாக செயல்படவில்லை. அடுத்த கிட்னியும் ஆபத்தான நிலையில் தாம் இருக்கின்றது என்றனர் மருத்துவர்கள்.
    ஆபத்தான கிட்னி அடுத்து நின்றது.
    அவள் பிணமானாள்.
    குழந்தைகள் அனாதைகளாயின.
    ஸ்ரீநகரில் இந்தக் குழந்தைகள் தட்டழிவதைக் கண்ட எழுத்தாளர் குழந்தைகளைப் பற்றி விசாரித்ததன் விளைவே இந்த உண்மைகள் நமக்கு வந்து கிடைத்தன.
    காணமற் போனவர்களின் பர்வீனா இப்போது வேறொரு வேலையை செய்து கொண்டிருந்தாள்.
    அதுதான் கிடைக்காத பிணங்களின் மனைவியருக்குப் பதில் சொல்லி பயனற்றுப் போனதால் கிடைத்தப் பிணங்களாம் மன்சூர் அஹ்மத் திராலி முஹம்மத் யூசுஃப் ஆகியவற்றின் சொந்தக்காரர்களை தேடிக் கொண்டிருந்தாள் முடிவில்லாமல்...
- தொடர் முற்றும்
    கஷ்மீர் மக்களின் இந்த அவலங்களை முடிந்த மட்டும் சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்
    இதுவே அந்த கஷ்மீர் மக்களுக்கு நீங்கள் இப்போது செய்யும் உதவி
    நிறைகள் எல்லாம் நிறைந்த அல்லாஹ்வை சாரும் குறைகள் என்னைச் சாரும்
    இவண்:    உங்கள் அன்புள்ள மு. குலாம் முஹம்மது
    இனியும் நிகழ்வுகள் தொடர்ந்து வைகறை வெளிச்சத்தில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்

புதைக்கப்பட்ட மக்கள் மறைக்கப்பட்ட வரலாறு


 புதைக்கப்பட்ட மக்கள் மறைக்கப்பட்ட வரலாறு

இஸ்ரேலிய இராணுவத்தினர் எங்களை அழித்தார்கள், அநியாயங்களுக்குள் ளாக்கினார்கள். எல்லாம் உண்மை தான். என்றாலும் அவர்களே நோயாளிகளாக மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்கும் வைத்தியம் செய்வது, எங்களது ஒழுக்கம். நாங்கள் பாலஸ்தீன் செம்பிறைச்சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்று அஜீசா ஹாலித் சொன்னது எனது காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.
நான் அந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்களுக்கும் மருத்துவம் செய்தேன். எந்த காஸா மருத்துவமனையை அவர்கள் துவம்சம் செய்ய வேண்டும் என முடிவுகட்டி செய்து முடித்தார்களோ அந்த மருத்துவ மனையே அவர்களுக்கு பயன்பட்டது, அஜீஸா ஹாலித் இன் பெருந்தன்மையால்.
இந்த அஜீஸா ஹாலித் தான் இஸ்ரேலிய இராணுவத்தால் இடிக்கப்பட்ட அந்த காஸா மருத்துவமனையை மீண்டும் கட்டியெழுப்பினார்கள்.
    இவையெல்லாம் என்னுள் அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்தின. நான் என்னால் முடிந்த சேவைகளை (அதிகமான அறுவை சிகிச்சைகளை) செய்தேன். செய்துகொண்டே இருந்தேன். அப்போது தான் நான் அந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். காஸா மருத்துவ மனையில் நான் பார்த்துக் கொண்டிருந்த எலும்பு முறிவு அறுவை சிகிச்சைப் பகுதிக்கு வேறு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டதாகவும் நான் காஸா மருத்துவமனை பணிகளிலிருந்து அடுத்த நாளே விடுவிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவு. இந்த உத்தரவு என்னை அந்த மருத்துவ மனைக்குத் தொண்டு செய்ய அனுப்பியவர்களிடமிருந்தே வந்ததால் அஜீஸா ஹாலித் போன்றவர்களால் எதுவும் செய்திட இயலவில்லை.
“நீ வேண்டும்” என்று அடிக்கடி அழைக்கும் அஜீஸா ஹாலித் போன்றவர் களாலேயே எதுவும் செய்திட இயலாத அளவுக்கு என்னை அங்கே அனுப்பியவர்களுக்கு சில “அரிய ஆற்றல்கள்” அழுத்தங்களைத் தந்துள்ளன.
உண்மையைச் சொன்னால் என்னை அழைத்த லெபனான் அரசு தான் என்னுடைய ஒப்பந்தம் முடிந்துவிட்டது. நான் திரும்பி போய்விடவேண்டும் எனக் கூறியுள்ளது
ஆனால் அந்த லெபனான் அரசு சொன்ன காரணம் தான் மிகவும் வேடிக்கையானது. அது, எலும்பு முறிவு சிகிச்சைப்பகுதிக்கு மருத்துவர்கள் தேவை இல்லை என்பது தான். இது மிகவும் வேடிக்கையான காரணம்.
நான் தான் காஸா மருத்துவ மனையிலுள்ள எலும்பு முறிவுப் பிரிவை தலைமையேற்று நடத்தி வந்தேன். எலும்பு முறிவுப்பிரிவில் எஃப்.ஆர்.சி.எஸ் படித்த ஒரே டாக்டர் நான் தான்.
அதாவது காஸா மருத்துவமனையில் இந்தப் பிரிவில் மிகவும் அதிகமாகத் தேர்ச்சிப் பெற்ற ஒரே மருத்துவர் நான்தான். அதேபோல் இஸ்ரேலியப்படைகளின் தாக்குதல்களால் அதிகமாக அந்த பாலஸ்தீன மக்களுக்குத் தேவைப்பட்டதும், இந்த அறுவை சிகிச்சை தான்
அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியல் மிகவும் நீளமானது. அறுவை சிகிச்சைக்கு காலதாமதமானதால் புண்கள் பழுத்து சீளும் சிராய்ப்புமாய் நொந்து நொடிந்து கொண்டிருப்பவர்கள் பலர்.
ஒடிந்துபோன எலும்புகள், சதைப்பகுதியை பறிகொடுத்து பளிச்சென வெளியே தெரிந்து கொண்டிருந்தன. இந்த பகுதிகளுக்கு வேறிடத்திலிருந்து சதையைக் கொய்து வைத்திட வேண்டும். எலும்புகளை மறைத்திட வேண்டும். இல்லையேல் இவை பழுத்து கெட்டுப்போகும். விரைந்து இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் இதுவே அவர்களை அழிக்கப்போதுமானது. இப்படி எண்ணற்ற சிகிச்சைகள் மீதமிருக்க காஸா மருத்துவமனையில் எலும்பு முறிவு பகுதிக்கு ஆட்கள் தேவை இல்லை என்பது வேடிக்கையானது. விசித்திரமானது.
    இத்தோடு மட்டுமல்லாமல் சிலருடைய உயிரைக் காப்பாற்றிட வேண்டும் என்றால் நொடிந்துபோன சில உறுப்புகளை முற்றாக மாற்றியாக வேண்டும்
    பாலஸ்தீன முஸ்லிம்களிடம் பரிவும் பாசமும் காட்டியவர்களுள் மிகவும் முக்கியமானவர் அபூஅலீ என்பவர். இவர் தான் அந்த அறுவை சிகிச்சை பகுதியிலுள்ள அரங்கத்தை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருப்பவர். இவர் சதா சர்வ காலமும் அறுவை சிகிச்சை உபகரணங்களை அங்காடியில் வாங்குவதற்கு அலைந்து கொண்டே இருப்பார். இப்படி அலைந்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது, லெபனானைப் பொறுத்தவரை. காரணம் லெபனானின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த இஸ்ரேலிய இராணுவம் யாரை வேண்டுமானாலும் அதுவும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம்.
ஒரு முறை ஆண்கள் கைது செய்யப்பட்டு விட்டால் அத்தோடு அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுவிடுவார்கள். அவ்வளவுதான்.
இத்தகையதொரு கடினமான சூழலில் தான் அபூஅலீ எதுவரினும் சரியே என தன் நொடிந்துபோன மக்களுக்காக மருத்துவ பொருள்களை வாங்கிட அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
    அடுத்தடுத்து இஸ்ரேலிய இராணுவம் போட்டிருந்த தடைகளையும் சோதனை சாவடிகளையும் அவர் கடந்து சென்றிட வேண்டியிருந்தது.
இப்படி அபூஅலீ அலைந்து கொண்டிருப்பதற்கு காரணம் நான் அடிக்கடி அவரிடம் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை செய்கின்ற அளவில் நாம் இன்னும் தயாராகவில்லை என்பதை  சொல்லி வந்தேன். அவர் இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் அந்த அறுவை சிகிச்சை அரங்கத்தை பெரிய அறுவை சிகிச்சை களையும் செய்வதற்குரியதாக ஆக்கித் தந்து விடுகின்றேன் என வாக்களித்தார். அதற்காகத்தான் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தார்.
இந்த அரங்கம் முழுமையாகத் தயாரானால் தான் பல பழைய காயங்களுக்கு மருத்துவம் செய்திட இயலும். இவற்றில் பல லெபனானின் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்கும்போது வீசிய குண்டுகளில் பட்டக் காயங்களாகும்.
அந்த மக்களுக்கு இன்றளவும் எந்த சிகிச்சையும் கிடைக்கவில்லை. அவர்கள் மருத்துவம் பெற்று உயிருடன் வாழ்ந்திடுவதை இஸ்ரேலிய இராணுவம் நிச்சயமாக விரும்பிடவில்லை. இதற்கெல்லாம் ஓர் அருமருந்தாக காஸா மருத்துவமனை தயாராகும் போது நான் வெளியே சென்றிடவேண்டும் என என்னை காஸா மருத்துவமனைக்குத் தருவித்தவர்கள் கூறுகின்றார்கள் இது வேடிக்கையிலும் வேடிக்கை.
இந்தச்சோக செய்தியை நான் யாருக்கும் சொல்லவில்லை. சொன்னால் நிச்சயமாக என்மீது பாசங்கொண்டவர்கள் பதறிப் போவார்கள். அவர்களின் மனம் கிஞ்சிற்றும் சோர்வடைவதை நான் விரும்பவில்லை.
    எல்லாமிருந்தாலும் உண்மையிலேயே என்னை வெளியேற்றுவதற்கு யார் காரணம் என்பதை நான் அறிவேன்.
பாலஸ்தீன செம்பிறை சங்கத்திற்கும் இதற்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை. அவர்களுக்கு நான் வேண்டும்.  ஆனால் அந்த மேலை நாட்டுப்பெண்கள் அந்த கிருஸ்தவ பெண்கள் இவர்களெல்லாம் என்னைக்குறி வைக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களை பொருத்தவரை நான் பாலஸ்தீன முஸ்லிம்களின் மேல் அதிகப்பற்று கொண்டவள். இஸ்ரேலியருக்கு எதிரானவள். ஆகவே அகற்றப்பட வேண்டியவள். அவர்களுக்கு ஒரு நிமிடம் கூட என்னோடு வேலை செய்ய இயலவில்லை. மனமுமில்லை. அவர்கள் என்னை அகற்றுவதில் வெற்றிக்கண்டு விட்டார்கள்.
உலகில் மன அழுத்தம் தரும் செய்திகளையே சிந்தித்துக் கொண்டிருப்பது சரியல்ல. மாறாக சுற்றி இருப்பவர்களோடு சந்தோசமாக இருக்கத்தலைப்பட்டேன். அரபு டீயை வரவைத்து அருந்தினேன். என்னோடு இருந்தவர்களிடம் உரையாடினேன்
நொடிந்தும் நொறுங்கியும் போன அந்தக் குழந்தைகளை தொட்டு வருடினேன். அவர்கள் அந்த வலியிலும் சற்று ஆறுதல் அடைந்தார்கள். நான் அவர்களைப்பார்த்து திருப்தி அடைந்தேன்
இதற்குள் காலை 4 மணி ஆகிவிட்டது
அதாவது நான் காஸா மருத்துவமனையைக் காலி செய்திட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. வேகவேகமாக ஆடைகளை மாற்றிவிட்டு எல்லோரிடமும் என்னை விட்டுவிடுங்கள். நான் தென் பெய்ரூத் ஐ சுற்றிப்பார்க்க விரும்புகின்றேன் என்றேன்.
அப்போது எல்லோரும் என்னைக் கேள்வியால் துளாவினார்கள். நான் சொன்ன பதிலால் எல்லோரும் அதிர்ந்தார்கள்.
திரும்பிப்பார்த்தேன். அஜீஸா ஹாலித் கண்களில் கண்ணீருடன் நின்றுக் கொண்டிருந்தாள்.
    எந்த சோதனையையும் இன்முகத்தோடு எதிர்கொள்ளும் அவள் எனக்காக மட்டுமே அழுதாள். நான் செய்த மொத்த சேவைக்கும் அவளது கண்ணீர் எனக்குப்பரிசு.
    அவளை நான் தேற்றினேன் என்னை அவள் தேற்றினாள்.
    நான் வெளியே வருமுன் மீண்டும் சென்று அந்த எலும்பு முறிவுப் பிரிவை அறுவை சிகிச்சை அரங்கை ஏறிட்டுப் பார்த்தேன்.
அங்கே டாக்டர் அமின் என்பவர் சிகிச்சை செய்துகொண்டிருந்தார். அவருடைய இளமை அவருடைய சிகிச்சைக்கு ஒரு வேகத்தைத் தந்திருந்தது.
“ஒன்றும் கெட்டுப்போகவில்லை இந்த மருத்துவமனை வாழும். நீண்ட சேவையை செய்யும். காரணம் அஜீஸா அதன் முதன்மை நிர்வாகி.”
    “இந்த எலும்பு முறிவுப் பிரிவும் நன்றாக இயங்கும். டாக்டர் அமின் போன்றவர்கள் அதனைக் கைவிட மாட்டார்கள்.”
    உண்மையில் என்னை மருத்துவ மனையிலிருந்து அகற்றியவர்கள் அதாவது லெபனான் அரசு அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது என்பதை நான் புரிந்துக்கொண்டேன்.
    நான் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு என்னுடைய மே ஃபயர் ரெசிடென்சி வந்தேன். தெற்கு லெபனானைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினேன்.
 - இத்துடன் புதைக்கப்பட்ட மக்கள் மறைக்கப்பட்ட வரலாறு தொடர் முற்றும் (அல்ஹம்துலில்லாஹ்)
    அன்பார்ந்த வாசகர்களே
ஆங் சுவீ சென் அவர்கள் லெபனானில் அகதிகளாக வாழ்ந்த பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆற்றிய சேவையை நாம் இங்கே தந்தோம்.
அவர் சேவை செய்தார் என்பதைவிட அவர்தான் ஷாப்ரா ஷத்திலா படுகொலைகளின் நேரடி சாட்சியம்.
    
 ஷாப்ரா ஷத்திலாவில் தாங்கள் மூன்று நாள்களாக நடத்திய படுகொலைகள் உலகுக்குத் தெரியாது என்றே நினைத்தார்கள் இஸ்ரேலியர்கள். ஏனெனில் இந்த படுகொலைகளை உலகுக்கு காட்டிட வேண்டிய ஊடகங்கள் அந்தப் பணியைச் செய்திடவில்லை. இதனால் கண்ணால் கண்ட சாட்சியங்கள் எதுவும் இல்லை என்றே இஸ்ரேலிய படையினர் எண்ணினார்கள். ஆனால் ஆங் சுவீ சென் நானிருக்கின்றேன் என்றார். அத்தோடு உலகில் நடைபெற்ற அத்தனை விசாரணைகளுக்கும் சென்று அந்த விசாரணைக் குழுக்களிடம் சாட்சியம் சொன்னார்.
அத்தோடு உலகெங்கிலும் நன்கொடைகளை வசூல் செய்து பாலஸ்தீன அகதிகளுக்கு உதவிகளைச் செய்தார்.
2007ம் ஆண்டு இந்த ஷாப்ரா ஷத்திலா அகதிகள் முகாம் கொலைகள் நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது இந்த நூலை மறுபதிப்பும் செய்தார்.
உலகெங்கிலும் சென்று இதனைப் பிரசாரமும் செய்தார். இவற்றை நவம்பர் 2012 வைகறை வெளிச்சத்தில் வெளியிட்டிருக்கிறோம் (வாசகர்கள் அதைப் படிக்கவும்)
ஆங் சுவீ சென் தன்னுடைய சேவைகளை தொடர்ந்து தருகின்றார். பாராட்டுகள்.
நாம் அவர் ஓர் ஐ விட்னஸ் கண்ணால் கண்ட சாட்சியம் என்ற அளவிலான அனைத்துத் தகவல்களையும் தந்துள்ளோம். வஸ்ஸலாம்.             - விநிவி

தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் தொடர்பான அறிவுரைக் குழுமத்தின் முன் திரு.மார்க்ஸ் அவர்கள் அளித்த அறிக்கை


 

 

தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் தொடர்பான அறிவுரைக் குழுமம் முன் பணிந்து  அளிக்கப்படுகிறது

 

இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டு சென்ற 17.09.2012 முதல் நீதிமன்றக் காவலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஞ்சையைச் சேர்ந்த தமிமுன் அன்சாரியைத் (த/பெ: அப்துல் ரஹ்மான்) தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (1980) 3(1)(a) பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் சென்ற 05-12-2012 அன்று பொது (சட்டம் & ஒழுங்கு) துறை செயலர் உத்தரவிட்டுள்ளார் (கடித எண். 4619/ச(ம)ஒ-எப்/2012). தமிமுன் அன்சாரியை நன்கு தெரிந்தவன் என்கிற முறையிலும், இவர் மீதான ஆதார வழக்கு குறித்த உண்மைகளை நேரில் சென்று ஆராய்ந்தவன் என்கிற முறையிலும் கீழ்க்கண்ட உண்மைகளைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
அ. ஆதார வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கண்டுள்ள உண்மைக்குப் புறம்பான செய்திகளும் முரண்களும்:
1. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவர் மீது  பதிவு செய்துள்ள வழக்கில் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் கூறுகின்றனர்.
“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2.இக்குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யானவை என்பது மட்டுமல்ல இவற்றுக்கு எந்த ஆதாரமும் கியூ பிரிவு போலீசால் முன்வைக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் உள்ள பல செய்திகள் பொய்யானவை. இது குறித்த உண்மைகளை நேரில் சென்று சென்ற செப்டம்பர் 21, 22, 23 தேதிகளில் நானும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த மனித உரிமைப் போராளிகள் பேரா.கல்யாணி, எஸ்.வி.இராஜதுரை, பேரா. கோச்சடை, கோ.சுகுமாரன், வழக்குரைஞர் கமருதீன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தோம். நாங்கள் அறிந்த உண்மைகள்  வருமாறு:
3.அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (35) தமிழில் முதுகலைப்பட்டம் பயின்றவர். அவரது தந்தை அப்துல் ரஹ்மான் மற்றும் மூன்று சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அன்சாரிக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளார். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை. அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்பு படுத்தப்பட்டதுமில்லை. கட்டுப்பாட்டிற்குப் பெயர் பெற்ற மார்க்ஸ்ட் கட்சியில் அவர் இருந்த காலத்தில் அவர் மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்ககப்பட்டதுமில்லை. கல்லூரியில் படித்த காலத்தில் அவர் தேசிய மாணவர் படையில் இருந்து சான்றிதழ்கள் பெற்றவர். பொதுப் பணிகளில் பங்கு பெற்ற செய்திகள் பல பத்திரிக்கைகளில் வந்துள்ளன. குடந்தையில் சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீயில் கருகிச் செத்தபோது தனது உயிரைப் பொருட்படுத்தாமல் பல குழந்தைகளைக் காப்பாற்றியவர் எனப் பலராலும் பாராட்டப்பட்டவர்.
தஞ்சையிலிருந்து கொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலி எனப்படும் வெங்காய வியாபாரிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார். நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து கப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார். கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள் இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கை புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார்.
4.அன்று நடந்தவை: 16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை. 11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள் முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார். சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப் முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார்.
அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும், தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறித் தொடர்பைத் துண்டித்துள்ளார். அன்று (17) மாலை  தொலைக்காட்சிகளில் காட்டப் பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடந்தது இதுதான்.  காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுன்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர்.
5. முதல் தகவல் அறிக்கையிலுள்ள முரண்கள்: பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும்  பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்படுகிறது. கியூ பிரிவு போலீசைப் பார்த்தவுடன் அன்சாரி ஓடியதாகவும், அவரை, இவர்கள் ஓடிப் பிடித்துக்  கைது செய்ததாகவும் சொல்லப்படுகிறது. டாஸ்மாக் கடை உட்பட அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, ஆப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர். தவிரவும் சீருடை இல்லாத கியூ பிரிவு போலீசைப் பாத்தவுடன் அன்சாரி ஒடினர் என்பதை ஏற்க இயலாது. அப்படி ஒரு சம்பவம் அன்று அந்த இடத்தில் நடக்கவே இல்லை என்பதுதான் உண்மை. ஆக ஒரு பகற்பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்துள்ளனர்.  முதல் தகவல் அறிக்கையில் உள்ள இந்தப் பொய், இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட வழக்கு என்பதை உறுதிப்படுத்துகிறது.
6. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம்.  செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். Most Favoured Nation என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
7.தவிரவும் தான் பதிவு செய்த ‘இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ர்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.
8. தஞ்சைக்கருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. அந்த ராதாவை சுமார் இரண்டு மாதங்கள்வரை விசாரிக்கவே இல்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை. தற்போது அளிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் ஆணையில் (பத்தி xii) ராதா (எ) ராதாகிருஷ்ணனிடமிருந்து பெற்ற விவரங்களாக, அவரது இராணுவப் பதக்கங்கள், அவரது சீருடை ஆகியவற்றின் புகைப்படங்கள், அவரது பராகிளைடிங் மற்றும் மோட்டார் சைக்கிள் ரைடிங் முதலான சி.டிக்கள் எனச் சொல்லப்படுகிறது. இவை எந்த வகையிலும் இரகசியங்கள் அல்ல என்பதும் எவ்வகையிலும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தன அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
9.தூதரக அதிகாரிகளுக்கே  உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன் செய்யப்பட்டதாகவே உள்ளது. 
10. 21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர் தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோசிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை  கியூ பிரிவு போலீசார் வழக்ககுரைஞர்களுக்குத் தகவல் தெரிவிக்க வில்லை. 16ந்தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின்போது கைப்பற்றியதாகாக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும். மீண்டும் 18.10.2012 அன்று முதல் ஆறு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்த போதும் அன்சாரியின் வழக்குரை ஞருக்கு விவரம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நாட்களில் தமீம் அன்சாரி தன்னிச்சையாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்பதும் அவருக்கும் நான்காவது எதிரிக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் அடங்கிய சி.டி கைப்பற்றப்பட்டது என்பதும் பொய் என்பதாலேயே தமீம் அன்சாரியின் வழக்குரைஞர்களுக்குச் செய்தி அறிவிக்கப் படவில்லை.
ஆ. தடுப்புக் காவல் ஆணை மற்றும் அதற்குத் துணையாக அளிக்கப்பட்டுள்ள ஆவணங்களிலுள்ள முரண்பாடுகள்:
1.ஆதார வழக்கில் கைது செய்யப்பட்டு 2 மாதங்கள் 18 நாட்களுக்கு மேலான பின்னரே தடுப்புக் காவல் ஆணை இடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இவ்வழக்கு தொடர்பாக வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. தமீம் அன்சாரி தவிர இதர எதிரிகளாகச் சுட்டிக் காட்டப்படும் யாரும் கைது செய்யப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லை. அதற்கான முயற்சிகள் ஏதும் செய்யப்படவும் இல்லை. கூடுதலாக முக்கிய விவரங்களோ, ஆவணங்களோ கிடைக்காத நிலையில் இத்தனை தாமதமாகத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான காரணம் குறித்து மனதைச் செலுத்தாமல் இந்த ஆணை இடப்பட்டுள்ளது.
2.தடுப்புக் காவல் ஆணையில் குறிப்பிடப்படும் 2,3ம் எதிரிகள் தமீம் அன்சாரியுடன் வணிக உறவு கொண்டிருந் தவர்கள், 4ம் எதிரி. இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி. இவர்கள் எல்லோரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கியூ பிரிவு காவல்துறையால் அளிக்கப்படவில்லை. அவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை. இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதராலய உதவி அதிகாரி அமீர் சுபைர் சித்திக் எனப்படும் 4வது எதிரியை தமீம் அன்சாரி இதுவரை பார்த்ததே இல்லை என்பதோடு அப்படி ஒருவர் இருப்பதே அவருக்குத் தெரியாது. தமீம் அன்சாரிக்கும் இவர்களுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் “இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றுவது”, “தென்னிந்திய இராணுவ மையங்களின்மீது தாக்குதல் நடத்துவது”  உள்ளிட்ட சதித் திட்டங்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றிற்கும், 4வது எதிரியை அவர் சந்தித்ததற்கும் தமீம் அன்சாரி போலீஸ் காவலில் இருந்தபோது அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தைத் தவிர, இந்த மூன்று மாத காலத்தில் விசாரணை அதிகாரியால் வேறு எந்தச் சிறு ஆதாரத்தையும் காட்ட இயலவில்லை. நீதிமன்றத்திற்கு வெளியே, தெரியாத நபர்களின் முன்னிலையில் போலீஸாரிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் செல்லத்தக்கதல்ல என்கிற சட்ட விதியின்மீது மனத்தைச் செலுத்தாமல் இந்த ஆணை இடப்பட்டுள்ளது.

3. தடுப்புக் காவல் ஆவணப் புத்தகத்தில் காணப்படாத சில முக்கிய ஆவணங்கள்:
(அ). தமீம் அன்சாரியிடம் பெறப்பட்டதாகச் சொல்லப்படும் ஒப்புதல் வாக்குமூலத்திற்குச் சாட்சியாகக் காட்டப்படும் கொட்டப்பட்டு கிராம அலுவலர் முத்துக்குமார் மற்றும் அவரது உதவியாளர் முத்துக்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் வசிப்பவர்களல்ல. அவர்கள் முன்னிலையில் தயாரிக்கப்பட்டதாக இவர்களின் 161 (3) வாக்குமூலத்தில் சொல்லப்படும் பார்வை மகஜர் மற்றும் மாதிரி வரைபடம் ஆவணப்புத்தகத்தில் இல்லை.
(ஆ). ஆவணப் புத்தகத்தில் இணைக்கப் பட்ட 161(3) வாக்குமூலங்களில் கியூ பிரிவு தலைமை காவலர் எண்: 1542 ஜி. ஜான்லியோன் ராஜின் வாக்குமூலம் காணப்படவில்லை. அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதா? பெறப்படவில்லையாயின் காரணம் என்ன? பெற்றிருந்தால் அது ஏன் இணைக்கப் படவில்லை?
(இ). ஆதார வழக்கில் 38 நபர்களிடம் இருந்து தடுப்புக் காவல் உத்தரவுக்கு முன்னதாகவே 161(3) வாக்கு மூலங்கள் பெறப்பட்டதாகவும், அனைத்து வாக்கு மூலங்களும் 26.11.2012 தேதிக்குப் பிறகு வெவ்வேறு நாட்களில் திருச்சி நீதித்துறை நடுவர் எண் 2 நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஆவணப் புத்தகங்களில் வெறும் 23 நபர்களின் வாக்குமூலங்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன.
(ஈ). ஆவணப் புத்தகத்தின் 227, 239, 251, 263, 275, 279, 285, 289, 293, 303, 309, 321, 335, 339, 345, 349  பக்கங்களில் உள்ள 161(3) வாக்குமூலங்களில் அவை பதிவு செய்யப்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை. வாக்குமூலத்தில் தேதி இல்லாதது பல்வேறு அய்யங்களுக்குக் காரணமாகின்றது.
(உ). முன்னதாகக் கைது செய்யப்பட்ட விவரமோ, இப்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட விவரமோ தமீன் அன்சாரியின் மனைவிக்கோ பெற்றோருக்கோ தெரிவிக்கப் படவில்லை. இவை டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நெறிமுறைகளுக்கும் இதர  சட்ட விதிகளுக்கும் எதிரானவை.
(ஊ). ஆவணப் புத்தகத்தின் 199, 201 பக்கங்களில் ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்’ என்னும் அமைப்பு, தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வெளியிட்ட சுவரொட்டிகளின் புகைப்படங் கள் இணைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஒட்டிய கண்டனச் சுவரொட்டிகள், மூத்த மனித உரிமைப் போராளிகள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அறிக்கை  மற்றும் அவை குறித்துத் தமிழ் ஆங்கில நாளிதழ்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்ட செய்திகள் ஆகியன ஆவணத்தில் இணைக்கப்படவில்லை. மற்றவற்றை மறைத்து ஒரு முஸ்லிம் அமைப்பை மட்டுமே இங்கே குறிப்பிடுவது முஸ்லிம்கள் இத்தகைய தேச விரோதச் செயல்களை ஆதரிக்கக்கூடியவர்கள் என்கிற அனுமானத்தின் அடிப்படியிலேயே செய்யப்பட்டுள்ளது.  இது காவல்துறை உள் நோக்கத்துடன் செயல்படுவதற்கு ஒரு அப்பட்டமான ஆதாரமாக உள்ளது. த.மு.மு.க என்பது வெளிப்படையாக இயங்கும் அமைப்பு என்பதோடு இவ்வமைப்பைச் சேர்ந்த இருவர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். முஸ்லிம்களின் பிரச்சினைகளை மட்டுமின்றி சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு உட்பட்ட பல்வேறு பொதுப் பிரச்சினைகளுக்காகவும் இயங்கும் ஒரு அமைப்பு.
(எ). தமீம் அன்சாரியைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலிஸ் நீதித்துறை நடுவர் முன் சமர்ப்பித்த மனு, அதற்கெதிராக தமீம் அன்சாரியின் வழக்குரைஞர் தாக்கல் செய்த மெமோ (21-09-2012) மற்றும் தமீம் அன்சாரி எழுத்துமூலம் சமர்ப்பித்த ஆட்சேபணை மனு; போலீஸ் காவலில் இரு முறை வைக்கப்பட்டிருந்த போதும் தமீம் அன்சாரியின் வழக்குரைஞர்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படாததை எதிர்த்து அவர்கள் கியூ பிரிவு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பிய தந்திகள், செப்டம்பர் 22 மற்றும் அக்டோபர் 24 தேதிகளில் நீதித்துறை நடுவர்கள் முன் சமர்ப்பித்த மெமோ, அஃபிடவிட், மனு மற்றும் கியூ பிரிவு  ஆய்வாளர் சமர்ப்பித்த பதில் மனு; கியூ பிரிவு புலனாய்வு ஆய்வாளர் தடுப்புக் காவல் வேண்டி ஏதும் சத்தியப் பிரமான வாக்குமூலம் அளித்திருந்தால் அது முதலிய ஆவணங்கள் ஏதும் தடுப்புக் காவல் ஆவணத் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை.
வீட்டு உபயோகத்திற்காக இருந்த டாடா இண்டிகா காரை கியூ போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க 02-11-2012 அன்று தஞ்சையிலுள்ள கியூ பிரிவு அலுவலகத்தில் டி.எஸ்.பி இராஜேந்திரனிடம் அன்சாரியின் மாமா லியாகத் அலி ஒப்படைத்தார். இதற்கு ஒப்புகை இரசீது ஏதும் தரப்படவில்லை. ஆனால் திருச்சி அலுவலகத்திற்குக் கொண்டு சென்று அன்சாரியின் மாமனார் அப்துல் ஜலீலும் மாமா லியாகத் அலியும் ஒப்படைத்ததாகப் பொய்யாக வழக்கு ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. இந்தக் காரை ஒப்படைக்க வேண்டி அன்சாரி சார்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு (R.P.No..8123/2012), இதறகு எதிராக கியூ பிரிவு போலீஸ் அளித்த ஆட்சேபணை மனு ஆகியனவும் ஆவணத் தொகுப்பில் இடம் பெறவில்லை.  
தமீம் அன்சாரி பக்கமுள்ள நியாயங்களை விரித்துரைக்கும் இந்த ஆவணங்கள், தடுப்புக் காவல் ஆணையை வழங்கும் அதிகாரியின் பார்வையிலிருந்து இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய முக்கிய ஆவணங்கள் தடுப்புக் காவல் ஆணையிடும் அதிகாரியின் கண்களிலிருந்து காவல்துறையால் மறைக்கப் பட்டுள்ளன என்றால், அது குறித்து எந்தல் கவலையும் இன்றி தடுப்புக் காவல் ஆணையில் அதிகாரி கையொப்பமிட்டுள்ளார்.
ஒரு இளைஞனின் வாழ்வில் மிகப்பெரிய வீழ்ச்சியை அளிக்கக் கூடிய ஒரு ஆணையில் பொறுப்புள்ள அதிகாரி மனத்தைச் செலுத்தாமல் கையொப்பமிட்டுள்ளது வருந்தத் தக்கது. இது அப்பட்டமான சட்டமீறல் ஆகும்.
(4).அன்சாரியின் மனைவி நபீலா, மாமனார் அப்துல் ஜலீல், மாமா லியாகத் அலி ஆகியோர் கியூ பிரிவு போலீசாரிடமோ வேறு யாரிடமோ வாக்குமூலம் எதுவும் அளிக்க வில்லை. ஆனால் இவர்கள் 161(3) வாக்குமூலங்கள் அளித்துள்ளதாக ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இது அப்பட்டமான ஒரு பொய்.
(5). அன்சாரி பிணையில் வெளிவரும் சாத்தியக் கூறு உள்ளதால் அவரைத் தடுப்புக்காவலில் வைக்க வேண்டுமென தடுப்புக்காவல் ஆணை பத்தி 11ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார வழக்கில் அன்சாரி பிணை மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை என்பதும் அவர்மீது இ.த.ச 120(B) மற்றும் Official Secrets Act S 3,4,9 ஆகிய கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவலில் வைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவருக்கு பிணையில் விடுதலை கிடைக்க வாய்ப்பிருந்திருக்காது. இது குறித்தும் தடுப்புக் காவல் ஆணையில் கையொப்பமிட்ட அதிகாரி மனதைச் செலுத்தவில்லை.

இந்த வழக்கைப் புலனாய்வு செய்யும் ‘கியூ’ பிரிவு குறித்து ஒரு குறிப்பு:
 கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றுபவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.
உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு.  ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும்கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை  என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும் சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக  அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால்  ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.
காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவகல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால்,   முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலான வற்றைச் செய்யும் ஒரு  நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும்.
இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது  வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியுமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.
கியூ பிரிவு போலீஸ் இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளது. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன.  இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங் கள் நடைபெற்றிருந்த ஒரு தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டுள்ளது. தவிரவும் கூடங்குளம் போராட்டம் பெரிய அளவில் நடைபெற்று வரும்  சூழலில் தமிழகத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது  தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் உள்ளது.
இத்தகைய அரசியல் நோக்கங்களின் பின்னணியில் ஒரு அப்பாவி இளைஞர் இன்று அரசியல் காரணங்களுக்காகப் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். அரசியல் காரணங்க ளுக்காக இரக்கமின்றிச் செயல்படும் காவல்துறை, அரசின் முகவராகச் செயல்பட்டு. கொடுக்கப்பட்ட ஆவணங்களின்மீது மனதைச் செலுத்தாமல் தடுப்புக் காவல் ஆணையில் கையொப்பமிட்டுள்ள அரசுச் செயலாளர் ஆகியோரால் இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை, நீதி வழங்கு அநுபவம் மிக்க இந்த அறிவுரைக் குழுமம்தான் சரி செய்ய வேண்டும்.
பொடா, தடா ஆகிய சட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களில் முஸ்லிம்களின் வீதம் அதிகம் என்பதையும், இவர்களில் 90 சதத்திற்கும் மேலானோர் பல ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பின் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நீண்ட சிறைவாசம் மற்றும் அதனால் ஏற்பட்ட அவப் பெயர் ஆகியவற்றால் அவர்களில் பலர் இன்று தம் வாழ்வை இழந்து நிற்கின்றனர். அந்த நிலை தமிம் அன்சாரிக்கும் வந்துவிடலாகாது.
கண்ணீருடன் தங்கள் அலுவலகம் முன் காத்திருக்கும் தமீம் அன்சாரியின் இளம் மனைவிக்கும் அவர்களின் நான்கு வயது மகனுக்கும் நீதி வழங்குங்கள்; தமீம் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புக் காவல் ஆணை தவறானது என அரசுக்கு அறிவுரை வழங்குங்கள் என உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்.   
டிசம்பர் 26, 2012,                                                           அ.மார்க்ஸ், சென்னை. முன்னாள் இயற்பியல் பேராசிரியர்,   (முகவரி: 3/5, முதலாம் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை- 600 020)

திருச்சி தமீம் அன்சாரி விவகாரம் தற்போது நடப்பது என்ன ?

 

 

திருச்சி தமீம் அன்சாரி விவகாரம் தற்போது நடப்பது என்ன ?


மனநோயாளியான அவனுடைய மாமா:

    தஞ்சை தமிமுன் அன்சாரி என்ற அப்பாவியை பிடித்து வந்து ஒரு பெரிய பாகிஸ்தான் உளவாளி எனக் காட்டினார்கள் உளவுத்துறையினர்.
    இது மூலம் தமிழகத்து முஸ்லிம்களும் பழிக்கப்பட வேண்டியவர்கள் என்றொரு பிரம்மையை மக்கள் மத்தியில் பதிய வைத்திட முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
    ஆனால் அ.மார்க்ஸ் அவர்கள் தலைமையில் சென்ற உண்மை அறியும் குழு தான் செய்த ஆய்வின் மூலம் உளவுத்துறையின் பொய்யையும் புரட்டையும் அம்பலப் படுத்தியுள்ளது.
    திக்குமுக்காடிபோன உளவுத்துறை சாட்சியங்களையும் தடயங்களையும் உருவாக்கிட தலைப்பட்டன.
    தமிமுன் அன்சாரி குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்து அவர்களுக்கு சொந்தமான கார்-ஐ கைப்பற்றி இருக்கின்றார்கள். அதை திருப்பி தந்திடாமல் காலந் தாழ்த்தி வருகின்றார்கள். இதற்காக ஒரு பெரும் போரையே நடத்தி முடித்து விட்டார்கள் வழக்கறிஞர் கென்னடி அவர்கள்.
    இங்கே வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே பாகிஸ்தானின் இலங்கை தூதரை பாகிஸ்தான் மாற்றி இருக்கின்றது என்றொரு காரணத்தைக் காட்டி வழக்கை மேலும் சிக்கலாக்கினர்.
    வழக்கை சிக்கலாக்கினார்கள் என்றால் அன்சாரிக்கு பெயில் கிடைக்காமல் செய்து விட்டார்கள். எனினும் வழக்கறிஞர் கென்னடி வழக்கறிஞர் கம்ரூத்தீன் ஆகியோர் தொடர்ந்து பிணை(பெயில்)க்காக வாதாடி வந்தார்கள்.
    குற்றப்பத்திரிகையை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்திட இயலாது என்பது தான் உண்மை நிலை. ஆகவே அன்சாரிக்குப் பிணை கிடைப்பது என்பது சட்டப்படி தவிர்க்க இயலாத ஒன்று.

NSA : 

 அதனால் வேறு வழியின்றி என்.எஸ்.ஏ என்ற தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சி இருக்கின்றார்கள். தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பாய்ச்சிட மேற்கொண்ட முயற்சிகளை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போடுவதற்கென அரசு நிர்ணயித்துள்ள பணத்தை பெற முடியாது. ஆகவே என்.எஸ்.ஏ என்ற தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சி இருக்கின்றார்கள்.
    முந்தைய அண்ணா திமுக ஆட்சியின் போதும் இப்படித்தான் நெல்லிக்குப்பத்தில் இரண்டு அப்பாவிகளைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார்கள் எந்த காரணமுமில்லாமல். அதன் பின் சுமார் எட்டு ஆண்டுகளுக்குப்பின் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்கள்.
    ஆகவே அதிமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்பது “75” வழக்குக்கு ஒப்பானது. ஆனால் அன்சாரி விவகாரத்தில் அதற்கான மீளாய்வுக்கு Review Committee உடனேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அ மார்க்ஸ்:

இந்த மீளாய்வு கமிட்டியில் அ.மார்க்ஸ் அவர்கள் தனது அறிக்கையிலுள்ள அனைத்¬யும் ஒருங்கிணைத்து வாதாடி இருக்கின்றார். இதனை 28 12 2012 தி ஹிந்து பத்திரிகையும் வெளியிட்டிருந்தது. அ.மார்க்ஸ் தனது வாதத்தில்:
கைது எங்கே வைத்து:  அன்சாரி திருச்சி விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினரைக் கண்டவுடன் பயந்து ஓடிவிட்டதாகவும்  ஒரு மரக்கடையின்  பக்கத்தில் வைத்து கைது செய்ததாகவும கூறியுள்ளார்கள். இது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்.
    விமான நிலையத்தில் அன்சாரி விமானத்தில் ஏறும் அனுமதி சீட்டையும் போர்டிங் பாஸ் வரைக்கும் வாங்கிய பின்னர் தான் கைது செய்யப்பட்டார் என்ற உண்மை காவல்துறையினர் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகள் அனைத்தையும் உறுதிபடுத்திட போதுமானது என்பதை தெளிவுப்படுத்தினார்
லேப்டாப்: கைது செய்யப்பட்ட பின் அன்சாரியை சித்ரவதை செய்து அவனுடைய மனைவிக்கு போன் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். அந்த போனில் ரவி என்றொருவர் வீட்டுக்கு வருவார். அவரிடம் தனது லேப்டாப்-ஐ கொடுக்க வேண்டும் எனவும் சொல்லிடச் சொன்னார்கள்.
    இந்த ரவி என்பவர் வேறு யாருமல்ல. காவல்துறையைச் சார்ந்தவர் தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்கள் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள்.
    இப்படி தன் வாதங்களை முன்வைத்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அவன் மீது பாய்ச்சியது தவறு. அதனை விலக்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    விடுதலை: 

தேசிய பாதுகாப்பு சட்டம் விலக்கப்படுமேயானால் உடனேயே அன்சாரி பிணையில் வந்து விடுவார். காரணம் அவருக்கு திருச்சி நீதி மன்றம் ஏற்கனவே பிணை வழங்கியுள்ளது. இது ஒரு நாடெங்கும் உளவுத்துறையால் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு பாய்ச்சப்படும் பொய் வழக்குகளில் ஒன்று என்றால் தேசிய பாதுகாப்பு சட்டம் அப்படியே நீடிக்கும். அந்த நிலையில் நாட்டில் பொய் வழக்குகளால் பொசுங்கி போன குடும்பங்களுள் ஒன்றாக அன்சாரியின் குடும்பமும் ஆக்கப்பட்டுவிடும்.
    இதில் சமர்பிக்கப்பட்டுள்ள உண்மைகளை இந்த மீளாய்வுக் கமிட்டி யதார்த்தமாக பார்த்தால் அன்சாரியின் குடும்பம் காப்பாற்றப்படலாம்
    மனநோயாளி: அன்சாரியை சிறைக்கு பார்க்க செல்லும் போதெல்லாம் அவருடைய மாமாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்கள். அதே போல் அடிக்கடி வீட்டுக்கு சென்றும் தொல்லைகளை கொடுத்துள்ளார்கள். காரை கொடு, வண்டியை கொடு என்றெல்லாம் பல அழுத்தங்கள். இவற்றால் அவனுடைய மாமா மனநோயாளியாகிவிட்டார். ஆகவே முதல் சேதாரம் நடந்தேறி விட்டது.
    நீதி சிறுபான்மையினருக்கில்லை. அவர்கள் நீதியின் பெயரால் கொடுமையையே சந்திப்பார்கள் என்று மீண்டுமொரு முறை உண்மைப்படுத்தப்படுகின்றது - எம் ஜி எம்